கொரோனா பெருந்தொற்று உலகளவில் 1 கோடி பேருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று பரவல் ஆபத்தான நிலையை எட்டி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
மேற்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள பல நாடுகளில் வைரஸ் பரவல் ஓரளவுக்குக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தாலும், உலகின் சில நாடுகள் இப்போது இந்த நோய் மிக வேகமாகப் பரவுவதைக் காண முடிகிறது.
கொரோனா தொற்று முதன் முதலில் 10 லட்சம் பேருக்குப் பரவ மூன்று மாதங்கள் ஆனது. ஆனால், தற்போது வெறும் 8 நாட்களில் 10 லட்சம் பேருக்கு பரவியுள்ளது.
எங்குத் தொற்று வேகமாகப் பரவுகிறது?
அமெரிக்கா, தெற்காசியா மற்றும் ஆப்ரிக்கா நாடுகள் தொற்று எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே உலகிலே அதிக கொரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கையைக் கொண்டுள்ள அமெரிக்காவில் தற்போது இன்னும் தொற்று அதிகரித்து வருகிறது.
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு நாளும் 40,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படுகிறது. இவர்களில் பெரும்பாலோனோர் அரிசோனா, டெக்சாஸ், புளோரிடா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
இவை எல்லாம் இரண்டாம் அலை தொற்று அல்ல. பொது முடக்கக் கட்டுப்பாடுகளை இந்த மாகாண அரசுகள் மிக விரைவிலே தளர்த்தியதால் ஏற்பட்ட விளைவு மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
10 லட்சத்துக்கும் அதிகமான தொற்றுகளுடன் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் உள்ள பிரேசிலிலும், தொற்று அபாயகரமாக அதிகரித்து வருகிறது.
சாவோ பாலோ மற்றும் ரியோ டி ஜெனிரோ போன்ற பெரிய நகரங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், பிரேசிலில் உள்ள மற்ற பகுதிகளில் மிகக்குறைவாகவே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதனால் இங்கு உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது.
இந்தியாவில் சமீபத்தில் ஒரே நாளில் 15,000 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பிகார் போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள மாநிலங்களில் மிகக்குறைவான அளவிலே பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அங்கெல்லாம் அதிக பரிசோதனைகள் செய்தால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியவரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வளர்த்து வரும் நாடுகளில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள், கொரோனா தொற்றுக்கு அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர்.