கரோனா வைரஸ் அதிகரித்து வரும் சூழ்நிலையில் இந்தியாவில் ஐபிஎல் தொடரை நடத்த முடியாமல் போனால் தொடரை தங்கள் நாட்டில் நடத்த நியூசிலாந்து முன்வந்துள்ளது. ஏற்கனவே ஐபிஎல் தொடரை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இலங்கை தங்கள் நாட்டில் தொடரை நடத்த ஆர்வம் காட்டியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பையை ஒத்திவைக்கும் அறிவிப்பு வந்தால் உடனடியாக ஐபிஎல் தொடர் குறித்த அறிவிப்பும் வெளிவந்துவிடும்.
பி.சி.சி.ஐ ஏற்கனவே ஐ.பி.எல் தொடரை செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் தொடக்கத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது.
ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்தவே பிசிசிஐ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் கரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
"இந்தியாவில் ஐபிஎல் தொடரை நடத்துவது முதல் தேர்வாக இருக்கம், ஆனால் சூழ்நிலை பாதுகாப்பாக இல்லாவிட்டால், அடுத்த தேர்வு வெளிநாடாகத்தான் இருக்கும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இலங்கைக்குப் பிறகு, நியூசிலாந்து ஐபிஎல் போட்டியை நடத்த முன்வந்துள்ளது" என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மேலும் அவர், "நாங்கள் அனைத்து பங்குதாரர்களுடனும் ஆலோசிப்போம். வீரர்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது. அதில் எந்த சமரசமும் இருக்காது" என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடர் இதற்கு முன்னதாக வெளிநாட்டில் நடந்துள்ளது. 2009 ஆம் ஆண்டின் முழு பதிப்பும் தென்னாப்பிரிக்காவில் நடந்தது. இதேபோல் 2014 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சில போட்டிகள் நடந்தது.
ஒருவேளை ஐபிஎல் தொடர் வெளிநாடுகளில் நடந்தால், போட்டியை நடத்துவதற்கு ஐக்கிய அரபு அமீரகம் தான் முன்னணியில் உள்ளது.
0 Comments: