பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக திகழ்பவர் பாபர் அசாம். பாகிஸ்தான் அணியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப்டனாகவும் அவர் செயல்பட்டு வருகிறார். அவரின் ஆட்டத் திறன் மற்றும் பேட்டிங் ஸ்டைலை வைத்துப் பலரும் அவரை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியோடு ஒப்பிடுவது வழக்கம். இப்படி பலர் ஒப்பிட்டு வருவது குறித்துப் பேசியுள்ள அசாம், “என்னை யாரோடாவது ஒப்பிட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், பாகிஸ்தானைச் சேர்ந்த வீரர்களோடு ஒப்பிடுங்கள். விராட் கோலியோடு மட்டுமே ஒப்பிட வேண்டாம். எங்கள் நாட்டிலும் ஜாவத் மியாண்டட், யூனிஸ் கான், இன்சமாம்-உல்-ஹக் உள்ளிட்ட பல லெஜண்டுகள் உள்ளனர். இதைப் போன்ற ஜாம்பவான்களோடு என்னை ஒப்பிட்டால், அதை நான் மிகவும் விரும்புவேன். அது எனக்கு இன்னும் பெருமையாக இருக்கும்” என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவர் பாபர் அசாம். ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவர் கோலி.
25 வயதாகும் அசாம், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் 50 பேட்டிங் சராசரிக்கு மேல் வைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 45-க்கும் மேல் சராசரி வைத்துள்ளார்.
தற்போது இங்கிலாந்து சென்றுள்ள 20 பேர் கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் பாபர் அசாமும் உள்ளார். பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடரானது எப்போது தொடங்கும் என்பது குறித்து இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை.
கொரோனா வைரஸ் பரவலால் கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச கிரிக்கெட்டிற்கு பிரேக் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரும் 8 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

0 Comments: